ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறை: மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்ற பிரசன்ன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையில் இருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த மனு மாயாதுன்ன கொரயா, குமாரத் ரத்னம், சஷி மஹேந்திரன், தமித் தொட்டவத்த மற்றும் அமல் ரணராஜா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி அந்த மனுவை வாபஸ் பெற்றார்.
2015 ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரைத் தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா பணத்தைக் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
…………………
