அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு எதையும் அரசு செய்யவில்லை – இப்படிச் சாடுகின்றார் விமல்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டிய முப்படையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அரசால் பழிவாங்கலுக்குள்ளாகின்றனர்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சிகளின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,

“முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன அடிப்படையற்ற காரணிகளைக் கூறி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் அமைதியை நிலைநிறுத்திய படைத்தளபதிகள் இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் மகா சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் இங்கு வருகை தந்தோம்.

அது தொடர்பில் பேசுபவர்களை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் அரசு முயற்சிக்கின்றமை தொடர்பிலும் மகா சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அரசு அபிவிருத்திகளையோ சமூக மேம்பாட்டையோ செய்யவில்லை. சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடன் சுமை முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

நிஷாந்த உலுகேதென்ன தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார். அதில் அவர் ‘புலி’ என்ற வார்த்தையை உபயோகித்தமைக்காகவே ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய முயற்சிக்கின்றனர்.

புலி என்பது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும். மாறாக அது தமிழ்ச் சமூகத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ விமர்சிக்கும் சொற்பிரயோகம் அல்ல.

இவ்வாறு அடிப்படையற்ற காரணிகளைக் கொண்டு முன்னாள் அரசியல்வாதிகளைக் கைது செய்ய முயற்சிப்பதை அரசியல் பழிவாங்கல் அன்றி எவ்வாறு கருதுவது?

இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் இவ்வாறு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை. பகிரங்கமாகக் கூற முடியாத பல பழிவாங்கல்களில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி என்பவர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தீர்மானம் எடுப்பவராவார். எனவே, அவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதும், ஏனைய சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். இலங்கையில் மாத்திரமின்றி எந்தவொரு நாட்டிலும் இதுவே யதார்த்தமாகும்.

தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அவ்வாறெனில் இனி அரசு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்துக் காட்ட வேண்டும். இதன் மூலம் எவ்வாறு பணத்தை மீதப்படுத்துகின்றனர் என்பதையும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.