கரூர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை!
கரூர்: கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குறிப்பு போலீசார் புதன்கிழமை காலை 6 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ. 35 கோடி லஞ்சமாக தருவதாகவும் தொலைபேசி மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் துறை ஆணை ஏ.அமல்ராஜிடம் புகாா் அளித்தார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை பெற்று சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு முன்பாக இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் கோதை நகரை சேர்ந்த அதிபன் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட குழுவினர் புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் கரூர், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று மண்மங்கலம் அருகே உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணியன் வீடு, திமுக நிர்வாகி கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு மற்றும் கோதை நகர் பகுதியில் உள்ள அதிபன் ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் வீடுகள் என 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் நரிக்கட்டியூரில் உள்ள டாஸ்மாக் குடோன், மேலாளர் அலுவலகம், ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபட்டுள்ளனர்.
