உள்ளக விசாரணை மூலமே நீதி வழங்க அரசு நடவடிக்கை – தமிழ்க் கட்சிகளின் கூக்குரலுக்கு அடிபணியோம் என்கிறார் அமைச்சர்.
“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி வழங்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும்” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
“இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் இங்கிருந்து அல்ல ஜெனிவா சென்று கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உள்ளக விசாரணையைத்தான் ஐ.நா. மனித உரிமைகளின் பேரவையின் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் இறையாண்மையை மீறி சர்வதேச சமூகம் செயற்பட முடியாது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த அரசுகள் போல் நாமும் நீதி வழங்கும் நடவடிக்கைகளில் பின்னிற்க மாட்டோம். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியே தீருவோம்.” – என்றும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்சன ராஜகருணா, பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட அந்த அமைச்சின் அதிகாரிகள் கொண்ட விசேட குழு இந்த வாரம் ஜெனிவா செல்கின்றது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. இதில், பங்கேற்கவே இந்தக் குழு அங்கு செல்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்து, நாடு திரும்பியுள்ளது. இந்தநிலையிலேயே நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவா செல்லவுள்ளது.
இந்தக் குழு ஜெனிவாவில் உள்ளக நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டவும் உள்ளகப் பொறிமுறை விசாரணைகளை வலுப்படுத்தும் செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடும் என்றும் கூறப்படுகின்றது.
