ஏழரைக் கோடி ரூபா சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் விமல் வீரவன்ச? – வழக்கு விசாரணை ஒக்டோபர் 22 இற்கு ஒத்திவைப்பு.

சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்ரோபர் 22 ஆம் திகதி எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் முற்பட்டிருந்தார்.

விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதாக நீதிமன்றைக் கோரினார்.

இதைக் கருத்தில் கொண்டு, சாட்சி விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டது.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது விமல் வீரவன்ச ஈட்டிய சுமார் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துகளை எவ்வாறு உழைத்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.