பாதுகாப்பு அச்சுறுத்தல் மஹிந்தவுக்கு உள்ளதாம் – பதறுகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார.

“விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.”

இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அரச வதிவிடத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் பலகோணங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்லர். இந்த நாட்டில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர். சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாட்டுக்காகத் தனது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றியவர்.

‘மஹிந்தவுக்கு மூன்று மகன்மார் உள்ளனர். அவர்களால் மஹிந்த ராஜபக்ஷவைப் பார்த்துக்கொள்ள முடியாதா?’ என்று சிலர் கேட்கின்றனர். தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும், பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்தான் பிரச்சினை உள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனையுடையோர் இன்னும் இருக்கின்றனர். இந்த நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர். அதனால்தான் அரகலய காலத்தில்கூட நிதி வாரி வழங்கப்பட்டது. அதன் மற்றுமொரு அங்கமாகவே மஹிந்த வெளியேற்றப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் விஜேராம மாவத்தைக்குச் செல்லமாட்டார். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தமது நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை. இலங்கையில்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.