மன்னார் தீவில் கை வைத்துள்ள அநுர அரசு நாளை கச்சதீவையும் தாரைவார்க்கக் கூடும்! – இப்படிச் சொல்கின்றார் வசந்த முதலிகே.

மன்னார் தீவில் இன்று கை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும், நாளை கச்சதீவைக்கூட இந்தியாவுக்கு வழங்குவதற்கு முன்வரக்கூடும் என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப்பீடமேறியது. ஆனால், இந்தியாவின் நிகழ்ச்சி நிரலே ஆட்சியாளர்களால் இங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை எவ்வாறான ஒப்பந்தங்கள் என்பது பற்றி அரசு நாட்டு மக்களுக்கு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கமைய மன்னார் தீவைக் கைப்பற்றுவதற்கு இந்தியா திட்டம் தீட்டியுள்ளது.

மன்னாரில் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படப் போகின்றது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குத் தாக்கங்கள் ஏற்படப் போகின்றது. இவை பற்றி ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை. எதிரணியில் இருந்தபோது மன்னார் நிலைவரம் பற்றி கதைத்தனர். ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை மறந்துவிட்டனர்.

இன்று மன்னார் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். மக்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதான் மறுமலர்ச்சியா?

இலங்கையின் கடல்வளத்தை இந்தியா கொள்ளையடிக்கின்றது. இதற்கு இலங்கை மீனவர்கள் நீதி கோரிய போதும் அரசு மௌனம் காக்கின்றது.

கச்சதீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஜனாதிபதி அண்மையில் கச்சதீவு சென்றிருந்தார். அதனை இந்தியாவுக்கு வழங்கமாட்டோம் எனக் கூறியிருந்தார். தான் கூறுவதற்கு எதிரானதையே ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, வழங்கமாட்டேன் எனக் கூறினாலும் கச்சதீவையும் வழங்கிவிடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உள்ளது. உள்ளக ரீதியில் பேச்சு நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.” – என்றார் வசந்த முதலிகே.

Leave A Reply

Your email address will not be published.