தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் எவரும் அரசியல் செய்யாதீர்கள்! – அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சி.வி.கே. வலியுறுத்து.

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் தியாக தீபம் திலீபனுக்கு உதவியாகவும் அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த ராஜன் உள்ளிட்ட மூத்த போராளிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு கேட்டுகொண்டனர்.

1988ஆம் ஆண்டு என்னுடைய செலவிலேயே தியாக தீபம் திலீபனுக்கான தூபி “தியாக தீப தூபி” என்ற பெயரில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அந்தத் தூபி 7 வருடங்களுக்கு பின்னர் 1995ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது.

அதன் காரணமாக நான் சுடப்பட்டு வேலை இழந்து இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, கைது எனத் தடுக்கப்பட்டு இந்தியாவுக்குத் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது தீபங்களுக்கு முன்பாக தலைகுனிந்து நிற்பவர்கள் தம்மைத் தியாகிகளாக நினைக்கின்றனர். இதில் யார், யார் இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

திலீபனுடன் தொடர்பைக் கொண்டவன், தூபியைத் திரும்ப நிறுவியவன் என்ற அடிப்படையில் எனக்கு அதைப் பற்றி தெரியும்.

2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் போது தூபி உடைக்கப்பட்டு 2003.08.25 ஆம் திகதி மீளத் திறந்து வைக்கப்பட்டதுடன் அந்தத் தூபி யுத்தம் முடிந்த பிறகு 25.03.2010 அன்று உடைக்கப்பட்டது.

தற்போது அந்த உடைக்கப்பட்ட தூபியின் பூர்வீகத் அடித்தளத்துக்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தூபி தொடர்பில் கடிதம் எழுதினேன். அது பின்னர் சாத்தியப்படவில்லை.

யுத்தம் முடிந்த பிறகு முதன்முறையாக 2016ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைத் துப்பரவாக்கி நினைவேந்தலைச் செய்யுமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியை நான் வலியுறுத்தினேன். அதன்படி அது நடந்தது. 2017ஆம் ஆண்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் இணைந்து கொண்டனர்.

2018 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைவிடத்தில் கொட்டில் போட்டு ஆதிக்கம் செலுத்தியபோது மாவை சேனாதிராஜாவை அழைத்துக்கொண்டு நான் சென்றபோது நாங்கள் ஏளனமாக நடத்தப்பட்டடோம்.

தற்போது உள்ளவர்கள் வரலாற்றைர் திரிபுபடுத்தக்கூடாது. திலீபன் எல்லோருக்கும் பொதுவானவன். அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். மதிப்பளிக்கப்பட வேண்டியவன். போட்டி, பொறாமையால் நினைவேந்தலைக் கொச்சைப்படுத்த கூடாது.

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பொருத்தமான அரசியல் கலப்பற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நினைவேந்தலிலும் குழப்பம் ஏற்படுத்தப்படுகின்றது. ஐந்து அல்லது ஏழு பேரைக் கொண்ட நினைவேந்தலுக்கான கட்டமைப்பை உருவாக்கி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைச் செய்ய வேண்டும். இதற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.