பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி ஆராய நாளை கூடுகின்றது சம்பள நிர்ணய சபை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகின்றது.
தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த தலைமையில், கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 1 மணியளவில் சம்பள நிர்ணய சபை கூடும் எனத் தெரியவருகின்றது.
சம்பள நிர்ணய சபையின் தொழில் அமைச்சின் நியமன உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்ரஸின் சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஷ்ணசாமி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிட்னண் செல்வராஜா, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், தொழில் தருநர் சார்பில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
