பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விவரம் விரைவில் அம்பலம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு.
“பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விவரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் நாடாளுமன்றத்தில் விரைவில் வெளிப்படுத்தப்படும். அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்துவார்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பான விவரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.” – என்றார்.
