லசந்த விக்கிரமசேகர படுகொலை: சந்தேகநபர்களில் மூவருக்கு மறியல்!
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் கடந்த 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“மிதிகம லசா” படுகொலையுடன் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான துப்பாக்கிதாரிக்கு மோட்டார் சைக்கிளைக் கொடுத்து உதவி செய்தவர், மோட்டார் சைக்கிளைப் பழுது பார்த்தவர் மற்றும் பிரதான துப்பாக்கிதாரிக்கு உதவிய ஓட்டோ சாரதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
