வேலைக்கு போகாமல் ₹37.5 லட்சம் சம்பளம்: போலி நியமனம் செய்து மனைவிக்கு சம்பளம் பெற்றுத் தந்த அரசு அதிகாரி!
மனைவி வேலைக்குச் செல்லாமலேயே சுமார் ரூ. 37.5 லட்சம் சம்பளம் பெற்றுத் தந்துள்ளார்.
ராஜஸ்தான், ‘ராஜ் காம்ப் இன்ஃபோ சர்வீசஸ்’ (RajComp Info Services) நிறுவனத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரத்யுமன் தீக்ஷித்.
இவர் அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம், தனது மனைவி பூனம் தீக்ஷித் பெயரில் போலிப் பணி நியமனம் செய்து, அதன் மூலம் பிரத்யுமன் தீக்ஷித் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கையூட்டுக்கு ஈடாக, தனது மனைவியைப் பணியில் அமர்த்தவும், அவருக்கு மாதாந்திர சம்பளம் வழங்கவும் இந்த நிறுவனங்களுக்கு தீக்ஷித் உத்தரவிட்டுள்ளார்.
பூனம் தீக்ஷித் ஓரியான்ப்ரோ சொல்யூஷனில் பணிபுரிவதாகக் கூறப்பட்ட அதே வேளையில், டிரீஜென் சாஃப்ட்வேர் நிறுவனத்திடமிருந்தும் ‘ஃப்ரீலான்சிங்’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் பணம் பெற்றுள்ளார். மேலும், தனது மனைவியின் போலி வருகைப் பதிவேடுகளை பிரத்யுமன் தீக்ஷித்தே அங்கீகரித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை டி.எஸ்.பி. நீரஜ் குர்னானி தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
