போதைப்பொருள் வியாபாரிகள், பாதாளக் குழுவினர் தேசிய அரசியலுக்குள் நுழைவதற்குக் கடும் முனைப்பு.
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் குழுவினர் தேசிய அரசியலுக்குள் நுழைவதற்கு எத்தனிக்கின்றனர் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இப்படியானவர்களுக்கு இடமளிப்பது தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். எனவே, குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பை வழங்காதிருப்பதற்குக் கட்சிகளுக்கும் பெரும் பொறுப்புள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகள், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாளக் குழுவினர் கட்சி அரசியலுக்கு வந்த பின்னர், வெள்ளை ஆடைகளை அணிந்துகொண்டு கறுப்பு வேலைகளைச் செய்கின்றனர். எனினும் எவற்றையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” – என்றார்.
