மும்பையில் பரபரப்பு: விளம்பரப் பட ஆடிஷன் எனக் கூறி 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த நபர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

மும்பையில் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்தவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பையில் விளம்பரப் படத்தில் குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்பதாக ஆர்ஏ ஸ்டூடியோஸில் பணிபுரியும் ரோஹித் ஆர்யா அறிவித்ததால், ஆடிஷனுக்காக 17 குழந்தைகள் சென்றனர்.

இந்த நிலையில், ஸ்டூடியோஸ் அறைக்குள் குழந்தைகள் நுழைந்ததும், அறையின் கதவை உள்புறமாக ரோஹித் தாளிட்டார். இதனால் சந்தேகமடைந்த குழந்தைகளின் பெற்றோர், உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ரோஹித் ஆர்யாவை மொபைல் போனில் தொடர்புகொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கு ஒரு விடியோவை ரோஹித் அனுப்பினார்.

ரோஹித் அனுப்பிய விடியோவில், “பணம் எனது கோரிக்கை அல்ல. நான் சிலரிடம் பேச வேண்டும். அதற்கு போலீஸார் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது என்பதால், குழந்தைகளை பிணைக் கைதிகளாக்கலாம் என்று முடிவு செய்தேன். நீங்கள் ஏதேனும் திட்டம் தீட்டினால், இந்தக் கட்டடத்தை முற்றிலும் தீவைத்து எரித்து விடுவேன்’’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே, கட்டடத்தின் பின்புறம் வழியாக அறைக்குள் நுழைந்த காவல்துறையினர், குழந்தைகளை விடுவித்துவிட்டு சரணடையுமாறு ரோஹித்திடம் கூறியுள்ளனர். ஆனால், தான் வைத்திருந்த ஏர் கன்-னை வைத்து போலீஸாரை சுட முயன்றார்.

இதனையடுத்து, தற்காப்புக்காக ரோஹித்தை போலீஸார் சுட்டு, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் ரோஹித் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி ரோஹித் உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.