கேரளாவில் கொடூரம்: மாந்திரீக விபூதியை ஏற்க மறுத்த மனைவி முகத்தில் சூடான மீன் குழம்பை ஊற்றிய கணவர்!
மனைவி முகத்தில் கணவர் சூடான மீன் குழம்பை ஊற்றியுள்ளார்.
கேரளா, சடையமங்கலம் அருகே உள்ள வைக்கல் பகுதியைச் சேர்ந்த ரெஜிலா கஃபூர் (36). இவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் சஜீர் தலைமறைவாக உள்ளார்.
முன்னதாக மாந்திரீகம் செய்யும் நபரிடம் இருந்து பெற்ற விபூதியை முகத்தில் பூசவும், தாயத்தை கட்டவும் தனது தலைமுடியை அவிழ்த்து முன் உட்காரும்படி சஜீர், ரெஜிலாவைக் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு ரெஜிலா மறுத்தபோது, சஜீர் கோபமடைந்து, சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த சூடான மீன் குழம்பை எடுத்து அவரது முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் ரெஜிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தனது கணவர் அஞ்சலில் உள்ள ஒரு உஸ்தாத் (மாந்திரீகம் செய்பவர்) என்பவரை அடிக்கடி சந்திப்பதாகவும், அவர் சொன்னதாலேயே தனக்கு விபூதி பூசவும் தாயத்துக் கட்டவும் முயன்றதாகவும் ரெஜிலா தெரிவித்தார்.
மேலும், சஜீர் அடிக்கடி தங்களது மகனையும் தாக்கியதாக ரெஜிலா குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள சஜீரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.
