ராஜஸ்தான் சாலை விபத்து: லாரி மீது வேன் மோதியதில் 15 பேர் உடல் நசுங்கி பலி!

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஹலொடி பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் பிகனீர் மாவட்டம் கோலயத் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர்.

வழிபாட்டை முடித்துவிட்டு இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பாரத் மலா தேசிய நெடுஞ்சாலையில் மடொடா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.