செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்! அடுத்த வருடமே 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி!! – நீதிவான் தலைமையிலான குழு நேரில் கள ஆய்வு.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரனித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வுத் தளத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


