‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் வசமாகச் சிக்கினர்!
களுத்துறை, பாணந்துறை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் ‘பேஸ்புக்’ ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் நால்வர் திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஏனையவர்களிடமிருந்து தலா 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை, கேகாலை, பதுளை மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
