ஊழல்வாதிகள் தப்பவே முடியாது! – எதிரணியின் ஹிட்லர் கதைக்கு ‘பட்ஜட்’ உரையில் அநுர பதிலடி.
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரைத் தோற்கடித்தது போல், எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு இன்றைய பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பில் அறிவிப்பதற்காகக் கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், மேற்படி ஹிட்லர் கதையைக் கூறி எதிரணிகளை ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அறிவிப்பு பற்றி இன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
“ஹிட்லர் வந்துவிட்டார் எனச் சிலர் கூறுகின்றனர். நீங்கள் ரஷ்யாவா, நீங்கள் அமெரிக்காவா (எதிரணியைப் பார்த்து கேட்கின்றார்…) ஹிட்லரைத் தோற்கடிப்பதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது வரலாற்றுக் கதை. அது உலக அரசியலில் முக்கிய திரும்பு முனை.
எதிரணிகள் எப்படியான விளக்கத்தை வழங்கினாலும் நாம் சட்டத்தை அமுலாக்குவோம்.
மக்களுக்கு அநீதி இழைத்திருந்தால், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டனை வழங்குவோம். அதற்கு எந்தப் பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. எமது நடவடிக்கையை கைவிடமாட்டோம்.” – என்றார் ஜனாதிபதி அநுரகுமார.
