வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 4 பேர் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் எட்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவங்கள் மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

வெலிகந்த – அசேலபுர பகுதியில் அசேலபுர – குருலுபெத்த வீதியில் உழவு இயந்திரம் எட்டு வயது சிறுவன் மீது மோதியது. இதன்போது, அசேலபுரத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் பலத்த காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

அதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலையில் தியாபுபுல பாலத்திற்கு அருகில், மாத்தளையிலிருந்து எல்வெல நோக்கிச் சென்ற ஓட்டோ பாதசாரி ஒருவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த 70 வயதுடைய முதியவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

தனமல்வில – வெல்லவாய வீதியில் பலஹருவ பகுதியில் எதிர்த் திசையில் பயணித்த வான் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, பலத்த காயமடைந்த 45 வயதான வான் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கொட்டவில – கம்புருகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் நேரு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்புருகமுவவைச் சேர்ந்த 82 வயதான சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.