பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் சரண் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மனாஸ் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டனர். பின்னர் அவை உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று சரண் மூத்த காவல் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் திங்களன்று பிடிஐயிடம் தெரிவித்தார்.

பலியானவர்கள் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். வீட்டு 30 ஆண்டுக்கு மேல் பழைமையுடையது என்றும் அதன் நிலை மோசமடைந்திருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த பகுதி பாட்னா வருவாய் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்குவதற்காக, சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு போலீஸ் அனுப்பியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.