கிழக்கில் மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்.
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பைச் சம காலத்தில் சந்தித்து வருகின்றது.
அதனால் கரையோர 7 ஆயிரம் குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பால் இந்தப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது .கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை.
கடந்த மூன்று வருட காலத்தில் கரையோரத்தில் இருந்த பாதை அழிக்கப்பட்டு மீனவர் கட்டடம், குருகுலம் மற்றும் சிறுவர் இல்லக் கட்டடங்கள் முழுமையாகச் சேதமாக்கப்பட்டன.
சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் பாரிய அரிப்பு ஏற்பட்டு வீதி தொடக்கம் வாடிகள், தென்னைமரங்கள், கிணறுகள் கடலுக்குள் சங்கமமாகி உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் நேற்று அங்கு சென்று பார்வையிட்டனர்.
ஆனால், இந்தத் திருக்கோவில் ஆலயம் முன்பாக 50 தொடக்கம் 75 மீற்றர் கூட இல்லாத ஒரு கல்லணையைத் தவிர வேறு எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் நடைபெறவில்லை.

2025ஆம் ஆண்டில் இப்போது சுமார் மூன்று மீற்றர் நீளம் அளவிலே கடலில் உள்வாங்கப்பட்டு பல மலசலகூடங்கள் கிணறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
