வரவு – செலவுத் திட்டத்துக்கு மனோ அணியினர் ஆதரவு! – காரணத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்கெடுப்புக்கு முன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களிடம் கூறுகையில்,
“தோட்டத் தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,750 வேதனம் வழங்க ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதியின் மீதான எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாகவே வரவு – செலவுத் திட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம்.
12 மாவட்டங்களில் அமைந்துள்ள மூன்று அரச தோட்ட நிறுவனங்கள், 22 பிராந்திய தோட்ட நிறுவனங்கள், சிறுதோட்ட உடைமையாளரது தோட்டங்கள் ஆகிய அனைத்திலும் தொழில் புரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி ரூ.1,750 கிடைக்க வேண்டும்.
இந்தச் சம்பளத் தொகைக்கு பின்னுள்ள கட்டமைப்பை ஆராய்வதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை. அது அரசின் பொறுப்பு.” – என்றார்.
