அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ஆளுங்கட்சி எம்.பி. பைசல் மீது அவர் பகிரங்கக் குற்றச்சாட்டு.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இந்த விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார்.

“சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார். என்னைப் புத்தளத்துக்கு வர வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சி.சி.ரி.வி. கமரா இருந்தது. அதில் இது பதிவாகி இருக்கும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்குச் சாவதற்குப் பயம் இல்லை. ஆனால் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது.” – என்றார்.

எனினும், தான் எவரையும் மிரட்டவில்லை எனவும், அர்ச்சுனா எம்.பி. பொய்யுரைக்கின்றார் எனவும் ஆளுங்கட்சி எம்.பியான பைசல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.