ரணில் – சஜித் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும்!
இல்லையேல் ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகருவார்கள் என்று ஹரின் பெர்னாண்டோ பகிரங்க எச்சரிக்கை
“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும். அதற்குரிய இடைவெளியை வழங்கினால் எமது ஆதரவாளர்கள் மாற்று அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும். எனவே, அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும் இணைய வேண்டும். அவ்வாறு இணைவார்கள் என நம்புகின்றோம்.
நுகேகொடைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதமானோர் பங்கேற்றனர். கூட்டத்தை நடத்துவதற்கு அந்தக் கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்ஷவை இளவரசர் என விளித்தேன். இந்த விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இந்த நாட்டில் இனி இளவரசர்கள் தெரிவாகப்போவதில்லை.” – என்றார்.
