வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த கைக்குண்டுகள்.
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில், தரையில் வெளிப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலன் மற்றும் பிளாஸ்டிக் பீப்பாயில் அந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கொள்கலன்களிலும் 109 கைக்குண்டுகள் மற்றும் எல்.எம்.ஜி. துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன என்று சந்தேகிக்கப்படும் 1,678 வெடிமருந்துகள் காணப்பட்டன என்று பொலிஸார் கூறியுள்ளனர்..
இந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று கூறப்படுகின்றது.
சம்பவ இடத்துக்குப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்த கிண்ணியா பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
