கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி

கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வடக்கு கோவா, அர்போரா பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதியில் (நைட் கிளப்) சனிக்கிழமை நள்ளிரவு 12.04 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்தில் இதுவரை 3 பெண்கள் உள்பட 23 பேர் பலியாகி இருப்பதாக கோவா காவல்துறை தலைவர் அலோக் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு நள்ளிரவில் விரைந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

”முதல்கட்டத் தகவலின்படி விடுதியின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் 3 அல்லது 4 பேர் மட்டுமே சுற்றுலாப் பயணிகள். மற்ற அனைவரும் சமையலறையில் பணியிலிருந்த விடுதி ஊழியர்கள்.

பாதுகாப்பு குறைபாட்டுடன் இயங்கிய விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். சுற்றுலாப் பருவத்தின் உச்சகட்ட காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது துரதிஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.