முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுவிப்பு.
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அசோக ரன்வல, வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலி ஸாரினால் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனமும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
சப்புகஸ்கந்த – டெனிமல்ல பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது, காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய தாய் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், குழந்தை விசேட சிகிச்சைக்காகக் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜீப்பில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அசோக ரன்வல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது
2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
