இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோரும் எதிரணித் தலைவர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குக்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்சுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நாட்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச முகவராண்மைகளின் இலங்கைப் பிரதானிகள் மற்றும் ஏராளமான அரச சாரா நிறுவனங்களின் இந்நாட்டுப் பிரதானிகள் எனப் பலரையும் சந்தித்து வருகின்றார்.

இத்தொடரின் மற்றுமொரு கட்டமாகவே இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்சை நேற்று சஜித் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் நாட்டில் எழுந்துள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பெற்றுத் தர முடியுமான கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும், இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இந்நாட்டுக்கு நல்கிய ஆதரவுகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் உதவிகளுக்கும் 220 இலட்சம் மக்கள் சார்பாக நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
