தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் வாக்குறுதி.

யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

தையிட்டி விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்குப் பௌத்த கலாசாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழே வழங்கப்படுகின்றது. இது பாடசாலை உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுவது போன்ற
பதவி உயர்வு அல்ல.

அத்துடன் தையிட்டி விகாரைப் பிரச்சினையையும் விகாராதிபதிக்கு வழங்கப்படும் சான்றிதழ் நிகழ்வையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம்.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் குறித்து எனது அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய, விகாரைக்குச் சொந்தமான காணிகளை விகாரைக்கு வழங்கவும் ஏனைய காணிகளை உரிய மக்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.