மீண்டும் ரணில் நாடாளுமன்றம் வருவாரா? – ராஜித விளக்கம்.

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவுக்கு மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் கூறியுள்ளார்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாட்டுக்கு அவரின் சேவை தேவையெனில், நாட்டுக்காக அவர் நாடாளுமன்றம் வருவார் என்றும் ராஜித குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாடாளுமன்றத்துக்கு ருவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று என்னிடம் ரணில் கூறியுள்ளார்.

அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியை அடைந்துவிட்டேன், நான் இனி எந்தப் பதவிகளையும் எடுக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்கு நான் தேவைப்பட்டால், நான் வந்து கடந்த முறை போல் உதவுவேன் என்றும் அவர் என்னிடம் கூறியுள்ளார்.

நாங்கள் எங்கு சென்றாலும், மக்கள் ரணில் மீது மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றார்கள். அவர் இருந்திருந்தால், இது நடந்திருக்காது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர் இருந்திருந்தால், எங்களுக்கு ஒரு சிறந்த சூழ்நிலை இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற கதைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. இரண்டு அல்லது மூன்று இடங்களில் அல்ல – பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இருந்து தகவல்களைக் கண்டேன். அவை அனைத்திலும், அந்த விடயம் உள்ளது.” – என்றார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊடக அடக்குமுறை இடம்பெறுகின்றது என்றும் ராஜித குற்றஞ்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.