இலங்கை மீண்டெழ வெளிநாட்டு உதவி போதாது; நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துங்கள்! – அரசிடம் சஜித் வலியுறுத்து.
“இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,
“பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
முகாம்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள குடியமர்த்துவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற வேண்டும். பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போதுமான உதவிகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இனியும் காலம் தாழ்த்தாது, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் கவனம் எமது நாடு பக்கம் திரும்பியுள்ள நிலையில் கூடிய விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், இது தொடர்பில் அரசு அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்தி கடும் நிபந்தனைகளை தளர்த்திக்கொண்டு, புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார்.
