புலிகளைத் திருப்திப்படுத்தவே டக்ளஸ், பிள்ளையான் கைது! – நாமல் கண்டுபிடிப்பு.
“புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளைத் திருப்திப்படுத்தவே டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி, ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. மக்களின் வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்து, மக்களுக்கு வந்து சேவையாற்றியுள்ளார். இவ்வாறிருக்கையில் தற்போது அவரைக் கைது செய்தமை அவசியமற்றது.
புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே பிள்ளையானும், டக்ளஸூம் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலேயே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நாள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.” – என்றார்.
