ஹரிணிக்கு எதிரான பிரேரணைக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவு வழங்குக! – மொட்டுக் கட்சியினர் வேண்டுகோள்.
“கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.”
இவ்வாறு இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று எம்.பிக்களும் வாக்களிப்பார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்கின்றனர் எனில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
அதேவேளை, எமது நாட்டுக்குப் பொருத்தமானதொரு கல்வி மறுசீரமைப்பே அவசியம். எமது ஆட்சியின் கீழ் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
