யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் ஜனாதிபதி – மேலும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்பு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று வியாழக்கிழமை வடக்குக்கு வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு சௌத்பார் காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார்.

இதன்பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர் பிற்பகல் 2 மணியளவில் வேலணை ஐயனார் கோயில் முன்றலில் நடைபெறும் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பார்.

பின்னர், பிற்பகல் 4 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில் வளாகத்தில் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்பார்.

நாளை வெள்ளிக்கிழமை தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

இதன்போது, பயனாளர்களுக்கு நிவாரண நிதி காசோலைகளை அவர் வழங்கி வைப்பார்.

பின்னர், நாளை பிற்பகல் 2 மணிக்கு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள போதைப்பொருட்களுக்கு எதிரான “முழு நாடும் ஒன்றாக” தேசிய கருத்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார்.

Leave A Reply

Your email address will not be published.