பௌத்தத்தை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை! – இப்படிக் கூறுகின்றார் ரணில்.
நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர். அந்நியர் ஆட்சியின் போது கூட பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனவே, தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
1931ஆம் ஆண்டின் பௌத்த விகாரைகள் மற்றும்
ஆலயங்கள் (நன்கொடை) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துகள் விகாரைகளுக்கே உரியவை.
நாம் தானமாக வழங்கும் அனைத்து தங்கப் பொருட்களும் ஆலயங்களுக்கு அல்லது விகாரைகளுக்கே சொந்தமானவை.
யாராவது இவற்றில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
1815ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒவ்வோர் அரசியல் கட்சியும் இதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, மகா சங்கத்தினருடன் இணைந்து அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன.” – என்றார்.
