தயாசிறி உண்மையான பௌத்தனாக இருந்தால் என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்! – நாடாளுமன்றத்தில் சிறீதரன் ஆவேசம்.
க்ஷ”நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒரு உண்மையான சிங்கள பௌத்தனாக இருந்தால் நான் மோசடியில் ஈடுபட்டுள்ளேன் என்று குறிப்பிட்டமையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் .
சூரிய மின்சக்தி திட்டத்துக்காக 70 மில்லியன் ரூபாவை மோசடியாக சிறீதரனின் வங்கிக் கணக்கிலும், மகன் சாரங்கனின் கணக்கிலும் வைப்பிலிப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று சிறீதரன் எம்.பி. உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஒரு மூத்த அரசியல் தலைவரான தயாசிறி ஜயசேகர இவ்வாறு பேசியது மிகப் பிழையான செயற்பாடாகும். அவர் அவ்வாறு சொல்லி இருந்தால், எந்த வங்கியில் எவ்வளவு பணம் எந்தத் திகதியில் வைப்பிலிடப்பட்டது என்பதை நீதியான ஓர் அரசியல் தலைவனாக இருந்தால் அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவர் உண்மையிலே ஆடையுடன்தான் வந்து சபையில் பேசுகின்றார் என்றால் அவர் இதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் இந்த நாடாளுமன்றத்துக்கு வந்து 16 வருடங்கள் கடந்திருக்கின்றன. இதுவரை காலத்தில் நான் நீதி, தர்மத்தின் படியே நடந்திருக்கின்றேன்.
நான் அரசமைப்பு பேரவையில் ஒரு சுயாதீன எம்.பியாக நீதியாகவும் சுயாதீனமாகவும் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுத்திருக்கின்றேன்.” – என்றார்.
