நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதிய இரத்துச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரண் அல்ல! – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசு உறுதியளித்திருந்தது.
இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் அதற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
