ராஜஸ்தானில் பயங்கரம்: 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி; 15 பேர் மீட்பு

ராஜஸ்தானில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் கோட்டா நகரில் சனிக்கிழமை இரவு மூன்று மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளிலிருந்து 15 பேர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் பலியானதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

காயமடைந்த எட்டு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர். பலியானவர்கள் ஆர்யன் (20), லட்சுமண் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஹீராலால் நகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மொத்தம் 15 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் பலியாகினர். காயமடைந்த சிலர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார். அண்டை பகுதியில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதுவே கட்டடம் இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என மண்டல ஆணையர் அனில் அகர்வால் கூறினார்.

கட்டடம் இடிந்த நேரத்தில் உணவகத்தில் சில வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.