கெஹலியவின் உறவினர் உள்ளிட்ட இருவர் இன்று பிணையில் விடுவிப்பு – கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சட்டவிரோதமாகச் சம்பாதித்தார் எனக் கூறப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெலவின் உறவினரான பண்டார ரம்புக்வெல ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
சந்தேகநபர்கள் தரப்பால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிவான், இருவரையும் தலா 5 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவருக்கும் பின்வரும் நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது:
சந்தேகநபர்கள் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாகக் கருதப்படும் 740 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
