இந்த அரசாங்கத்தை அசைக்கவே முடியாது! விஜயதாஸவின் பேச்சு நகைப்புக்குரியது; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தக்க பதிலடி.

“ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை யாராலும் அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

‘தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருகின்றது’ என்று அந்தக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, எதிரணியில் தேர்தல்கள் குறித்து சிந்திப்பதை விட நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேசுவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. தற்போதைய நிலையில் அரசு பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணிகளிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தல் கனவு காண்பதை விடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை யாராலும் அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பிளவுபட்டு, பலவீனமடைந்துள்ளது. அந்த பலவீனத்தை மறைப்பதற்காகவே ‘கட்சியைப் பலப்படுத்துகின்றோம்’, ‘தேர்தலுக்குத் தயார்’ போன்ற வீர வசனங்களை விஜயதாஸ ராஜபக்ஷ பேசி வருகின்றார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.