முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி கொலைத் தீர்ப்பு: நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் உறுதி! – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மிலேச்சத்தனமான
வன்முறைக்கு ஒரு பாடம்

“எமது கட்சியின் அமைதியான உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை தொடர்பான தீர்ப்புக்காக நீதித்துறைக்கு எனது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தத் தீர்ப்பின் ஊடாக நாட்டில் சட்டம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்ற வலுவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டுபவர்களுக்கும், மிலேச்சத்தனமாகச் செயற்படுபவர்களுக்கும் இதுவொரு சிறந்த பாடமாகும்.

அரசு மீதான
விமர்சனங்கள்

இன்று நாடாளுமன்றமும், சபாநாயகரின் செயற்பாடுகளும் கேலிக்கூத்தாக மாறியுள்ளன. கடந்த ஒன்றரை வருட காலத்தில் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் நாட்டில் நிகழவில்லை.

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினாலும், நடைமுறையில் எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது. அரச தரப்பினரின் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

முன்னாள் தலைவர்கள் பாதுகாப்பு மற்றும் நேர மேலாண்மைக்காக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தியபோது அதைக் கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று அதே வசதிகளைத் தாராளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

உயிரற்ற சுதந்திர தினமும்
ரணவிருவர்களும்

கடந்த சுதந்திர தின நிகழ்வுகள் எவ்வித உத்வேகமும் இன்றி ‘உயிரற்ற’ ஒன்றாகவே அமைந்திருந்தது. நாட்டின் கௌரவத்தைப் பறைசாற்றும் ரணவிருவர்களின் பெருமை சிதைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.