அனர்த்தப் பகுதிக்கு நேரில் சென்றார் ஐ.எம்.எப். பணிப்பாளர்! – பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பு

‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாரிய மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவதுர கிராமத்திற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்தார்.

மாவதுர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்களுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அனர்த்தத்தின் போது அரசாங்கம் முன்னெடுத்த துரித மீட்பு நடவடிக்கைகளைப் பாராட்டினார். அத்துடன், இக்கட்டான சூழலில் மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை மற்றும் தைரியம் முன்மாதிரியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களிடம் உரையாடிய கிறிஸ்டலினா ஜோர்ஜிவா,

“இன்று இங்கு வாழும் சிறுவர்கள், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குவார்கள். இளைய தலைமுறையினரை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் போது, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.