இலங்கை – பூட்டான் தலைவர்கள் பல்துறை ஒத்துழைப்பு பற்றி பேச்சு.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்துத் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

குறிப்பாக, பிராந்திய ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் மற்றும் அதனைத் தெற்காசியப் பிராந்தியத்தின் பொதுவான நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சர்வதேசத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்த உச்சிமாநாட்டின் ஓர் அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வதற்கு இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.