இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையில் புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குவது குறித்தும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இரு நாடுகளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.

உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்த உச்சிமாநாட்டின் இடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் சிநேகபூர்வ சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.