கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: முறிந்து விழுந்த மின் கம்பத்தில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு.

குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் பலத்தினால் மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

அதேநேரம், குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகக் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.