விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்குக் கடிதம் – வீட்டிலேயே வாக்குமூலம் பெறுமாறும் கோரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.

தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக இன்று அந்தப் பிரிவில் முன்னிலையாக முடியாது என்பதை அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

வைத்தியர்களின்
அறிவுரை

அவர் சிஐடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் தற்போது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டுமெனில், அதனைத் தனது இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னணி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரிட்டனுக்கான தனிப்பட்ட பயணத்துக்காக, 1.66 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே, இன்று முன்னிலையாக வேண்டிய பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது இயலாமையை மருத்துவக் காரணங்களைக் காட்டித் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.