திஸ்ஸ விகாரை விவகாரம்: காணி விடுவிப்பில் தொடர்ந்து இழுபறி – கொழும்புப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு.

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம் தொடர்பில், கொழும்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில், காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் இழுபறி தொடர்கின்றது.

பெரும் சர்ச்சைக்கு உரியதாக மாறியிருக்கும் திஸ்ஸ விகாரை விடயத்தில் தீர்வொன்றைக் காண்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு முயற்சித்து வருகின்றது. இதற்காக பௌத்தசாசன அமைச்சக அதிகாரிகள், அரச அதிகாரிகள், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஆகிய தரப்புகளுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, காணிகளை விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாராதிபதி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ விகாரை விடயத்தில் மக்களின் காணிகளை மக்களிடமே வழங்க வேண்டும் என்று நயினாதீவு மற்றும் ஆரியகுளம் விகாராதிபதிகள் வலியுறுத்திவரும் நிலையில், அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் அழைக்கப்படாமலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

காணிகளுக்கு உரிய ஆவணங்கள் பொதுமக்களால் முறைப்படி வழங்கப்பட்ட போதிலும், திஸ்ஸ விகாராதிபதியால் இதுவரை முறையான ஆவணங்கள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இல்லாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டக் கலந்துரையாடல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.