குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது! மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி!! – மனைவி வெளிநாட்டில் இருக்கையில் நேர்ந்த சோகம்.
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறின் விளைவாக, மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளார்.
மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மாமனார் மருமகனைக் கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் உடனடியாக தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார் என்று தெரியவருகின்றது.
குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான மாமனார் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
