அண்ணனை வாளால் வெட்டிக்கொன்ற தம்பி – காணித் தகராறு கொலையில் முடிந்தது.

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹோமாகமை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபருக்கும் அவரது 28 வயதுடைய தம்பிக்கும் இடையில் காணி விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த வாளால் அண்ணனைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த அண்ணன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய தம்பியைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

காணிப் பிரச்சினையே இந்தச் சகோதரப் படுகொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.